search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேட்டூர் லாரி டிரைவர் கொலை"

    மேட்டூர் அருகே லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டூர்:

    மேட்டூரை அடுத்த காவேரி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் செல்ல வேலு (வயது34). லாரி டிரைவரான இவர் கடந்த 17-ந்தேதி கிழக்கு, மேற்கரை கால்வாய் கரை பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். மர்ம நபர்கள் செல்லவேலுவை கொலை செய்து கால்வாய் கரை பகுதியில் வீசி சென்றது தெரியவந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று செல்ல வேலு உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிநவ் சம்பவ இடத்தை நேரில் வந்து பார்வையிட்டு விசாரணையை துரிதப்படுத்தினார்.

    கொலை நடந்து 3 நாட்களாக கொலைக்கான காரணம் குறித்தும், கொலையாளிகள் குறித்தும் துப்பு துலங்காமல் இருந்தது. இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பல்வேறு பகுதிகளுக்கு சென்று கொலையாளிகளை தேடினர். அப்போது இந்த கொலையில் செல்லவேலுவிடம் கிளீனராக இருந்த 17 வயது சிறுவன் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    செல்லவேலுவுக்கு அந்த பகுதியை சேர்ந்த 40 வயது பெண்ணுடன் தொடர்பு இருந்தது. அடிக்கடி அந்த பெண்ணை தனிமையில் சந்தித்து வந்துள்ளார். இது அந்த சிறுவனுக்கு தெரியவந்தது. செல்லவேலுவுக்கு தெரியாமல் சிறுவன் அந்த பெண்ணிடம் பழக ஆரம்பித்தான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணும் சிறுவனும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

    இந்த வேளையில் அங்கு வந்த செல்லவேலு அவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்தார். சிறுவனை கண்டித்த செல்லவேலு இதுபற்றி அவனது பெற்றோரிடம் சொல்லிவிடுவதாக எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து செல்லவேலுவை கொலை செய்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதை தொடர்ந்து போலீசார் சிறுவனை கைது செய்தனர். அவனிடம் இருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×